வியாழன், 22 ஜனவரி, 2009

நூல் ஒன்று --- படிப்பது சுகமே - வெ. இறையன்பு.

பள்ளிக்கூட புத்தகங்களை தாண்டி நான் படித்த முதல் புத்தகம் "படிப்பது சுகமே" அதனால்தான் என்னவோ எனக்கு படிப்பது என்றுமே சுகமாக உள்ளது. 

பள்ளி செல்லும் மாணவர்கள் எப்படி தங்கள் நேர மேலாண்மையை கடைபிடிப்பது, தேர்வில் எப்படி பயத்தை தவிர்ப்பது, சரியான திட்டமிடல் என்றால் என்ன? போன்ற பல வழிமுறைகளை கூறும் இந்நூல்.. தேர்வில் எப்படி அதிக மதிப்பெண் எடுப்பது போன்ற குருட்டுத்தனமான ஆலோசனைகளை கொடுக்கவில்லை. காரணம் இந்த புத்தகம் படிப்பதை தவமாக செய்ய சொல்கிறதே தவிர படிப்பதை கடமையாக செய்ய சொல்லவில்லை. 

மதிப்பெண்கள் எடுப்பதற்காக படிக்கும் படிப்பு அடுத்த கணமே மறந்து போகும் என்றும், அதனால்தான் தேர்வில் பலர் தோல்வி கண்டு மனம் துவண்டுப் போவதாக இந்நூல் விளக்குகிறது. தேர்வு என்பது நமது படிப்பறிவை படித்த செய்திகளை நாம் உள்வாங்கிக் கொண்டதை சோதிக்கும் களமாக அமையவேண்டும். மாறாக தற்போது அனைவரும் தேர்வுக்காக படிக்கின்றனரே தவிர யாரு படித்ததற்காக தேர்வு எழுதுவதில்லை என்கிற கருத்தை ஆணித்தரமாக கூறும் இந்நூல் மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். 

மேலும் படிப்பதற்கான பயிற்சி இந்நூல் மூலம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்.

இந்நூலின் ஆசிரியர் திரு. வெ. இறையன்பு I.A.S. அவர்கள். தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த நல்ல எழுத்தாளர் மற்றும் தேர்ந்த படிப்பாளர் திரு. இறையன்பு அவர்கள். தற்போது சுற்றுலாத் துறையில் செயலாளராக இருக்கும் இவர் காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்த பொது இவர் செய்த பணிகள் யாராலும் மறக்க முடியாது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொற்காலம் அது என்றால் மிகையாகது. இவர் மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பார் தவிர மீனைக் கொடுத்து உங்களைக் கெடுக்கும் வள்ளல் பெருமான் அல்ல. நாம் வாசிக்க வேண்டிய பல நூல்களை எழுதியுள்ள திரு. வெ. இறையன்பு அவர்களின் "உள்ளொளிப் பயணம்" நூல் மிக அறிய கருத்துகளை நம்முடன் பகிர்ந்துக் கொள்கிறது. அது பற்றி வேறொரு பதிவில் காண்போம்.

நூல் பெயர்: படிப்பது சுகமே
ஆசிரியர்: திரு. வெ. இறையன்பு I.A.S.
நூலின் விலை: ரூபாய் 35/-
பதிப்பாளர்: தமிழ் புத்தகாலயம்
முகவரி: No. 34 sarangapani street,
Off: Thirumalaipillai Road
T.Nagar Chennai 600017

தொலைபேசி: (044) 28340495, 28344528

வணக்கம்

இங்கு பரிந்துரைக்கப் படும் நூல்கள், நான் கூறும் முகவரியில் கிடைக்க வில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். அந்த புத்தகம் கிடைக்க என்னால் இயன்ற உதவிகளை செய்கிறேன். தொடர்பு கொள்ள: 9894098236

அகன்ற சாலை. சாலையின் இருமங்கிலும் வரிசை வரிசையாய் வாகனங்கள். குண்டூசி நுழைவதற்கே இடம் தேடும் நெருக்கடியில் சாலையின் மறுபக்கத்தை அடைய நினைக்கும் பார்வையற்றோரின் கையைப் பிடித்து, சாலையின் மறுபக்கத்தை அடைய உதவினால்.. அது ஒரு நிமிட உதவி ஆயினும், அந்த நேரத்தில் அது பேருதவி. வாழ்க்கையின் ஒவ்வொரு அடர்ந்த கணத்திலும், சுற்றி இருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட புத்தகங்கள் நமக்கு அத்தகைய உதவியை செய்கிறது. ஆனால் இன்னும் பலர் அதை சரியாக உணரவில்லை.


புத்தகம் படிப்பது என்பது ஒவ்வொரு நாளும் நிகழ வேண்டிய ஒரு சராசரியான நிகழ்வு. ஆனால் இன்றைய சமூகத்தில் புத்தகம் படிப்பவர் என்றால் மற்றவர்கள் அவருக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும்... என்னவென்று சொல்ல..

புத்தகம் படிப்பவர்களின் மனம், அறிவு எல்லாம் ஒரு தூய நிலையை அடைகிறது என்றால் மிகையல்ல.. குழந்தைகளின் கண்களில் உள்ளது போன்று ஒரு தெளிவு அவர்களின் அறிவிலும், மனதிலும் எப்போதும் குடிகொண்டிருக்கும். படித்தவர்கள்தான் தொடர்ந்து தவறு செய்கிறார்கள் என்றொரு வாதம் இங்கு எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. படித்தவர்கள் என்ற சொல்லே கடந்த காலத்தைக் குறிக்கிறது. அவர்களின் அறிவும் அவர்களை விட்டுக் கடந்துப் போய்விட்டது என்றே பொருள். தொடர்ந்து படிக்கும் யாரும் பிறருக்கு தீங்கு இழைக்கும் தவறுகளை செய்வது இல்லை. அவர்கள் நிகழ்காலத்தின் விண்மீன்கள். தங்களை எப்போதும் பெரிதுப் படுத்திக் காட்டிக் கொள்வதில்லை.


ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்தவிட்டு, புத்தகங்களை மூட்டைக் கட்டிவைத்து கடமையை சரிபார்க்கும் சராசரி மனிதர்கள், படித்தவர்கள் எனும் உயரிய சொல்லுக்குத் தகுதியானவர்கள் அல்ல. இவர்கள் படிக்காத பாமர மக்களை விட சற்றே ஆபத்தானவர்கள். தவறான சூழ்நிலையில் தங்கள் படிப்பை அதன் பயனை வெளிப்படுத்த நினைக்கும் இவர்களின் போக்கே இந்த சமூதாயத்தை பலமுறை தவறான பாதைக்கு இட்டு சென்று விடுகின்றன.

பறந்து விரிந்த இந்த உலகின் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப் படவேண்டியவை. என்றோ படித்த வாங்கிய பட்டம் ஒரு நாளும் உங்கள் உதவிக்கு வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிள்ளைகளை பெற்றோர் அவர்களுக்கு தொடர்ந்து ஒரு சில வருடம் மட்டும் உணவு கொடுத்து விட்டு பின்னர் அவர்களை பற்றி அக்கறை இன்றி திரிந்தால் அவர்கள் மனுதர்ம சட்டப்படி தண்டனைக்குரியவர்கள். அது போலத்தான் உங்கள் அறிவும் ஒரு பட்டப் படிப்போ, பட்ட மேற் படிப்போ உங்கள் அறிவிற்கு நீங்கள் கொடுக்கும் சரியான உணவல்ல.. தொடர்ந்து அதற்கான உணவு பரிமாறப் படவேண்டும். அது சரிவிகித உணவாகவும் இருத்தல் அவசியம். அனைத்து தரப்பட்ட புத்தங்களையும் வாசிக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தினை புரட்டம்போதும், வாழ்வின் ஒவ்வொரும் பக்கத்தையும் நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். இதைத் தெரிந்துக் கொண்டு நான் என்ன பண்ண போகிறேன் என்கிற எண்ணமே உங்கள் முன்னேற்றத்தின் முதல் எதிரி. கற்றுக் கொள்ளத் துடிக்கும் ஆர்வமே உங்கள் முதலீடு. உலகின் உள்ள அனைத்தையும், அனைத்தின் இயக்கங்களையும் தெரிந்து கொள்ள முயலுங்கள். அதற்கு புத்தகங்கள் உங்களுக்கு சிறு அளவிலாவது உதவும். தொடர்ந்து மூன்று மாதங்கள் புத்தகம் படிப்பதை கடமையாக கொள்ளுங்கள். அதனை ஒரு பணியாகவே நினைத்து கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு பழக்கமாகிப் போகும். ஒரு பொருளுக்கு அடிமையாவது இப்படித்தான். நீங்கள் புத்தகத்துக்கு அடிமையாகுங்கள். உலகம் உங்களுக்கு அடிமையாகும். உங்கள் அன்புக்கு அடிமையாகும்.

ஏன் படிக்க வேண்டும்?

உலகில் உள்ள ஒவ்வொரு பிரச்சனைக்கும் மூலக் காரணமே புரிந்துணர்வு இல்லாமையே. பாரம்பரியம் மிக்க பாரத தேசத்தில் கூட லட்சக் கணக்கில் விவாகரத்து வழக்குகள், கொலை, கொள்ளை, தீய எண்ணங்கள் போன்ற பல எதிர்வினை செயல்களுக்கு மூலக் காரணமே ஒரு சிலரின் மனம் பன்படாமையே. 

காய்ந்துக் கிடக்கும் களிமண்ணைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. நீருடன் அவற்றை கலந்து இலகுவாக்கி பின்னர்தான் நாம் நினைத்த வடிவில் அவற்றை கொண்டு வர முடியும். அது போலதான் களிமண்ணாய் இருக்கும் மனித மனமும் பண்பட படிப்பு எனும் நீர் கலக்க வேண்டும். 

படி (படிப்பு) என்ற சொல்லை மேலோட்டமாக பார்த்தல் அது ஒரு சாதாரண வார்த்தைதான். ஆனால் அவற்றின் ஆழத்தை உணர்ந்துக் கொண்டால் நாமும் ஆழ உழலாம். 

சிந்தித்துப் பாருங்கள் மக்களே!!

இவ்வுலகம் எப்படி படிப்படியாய் நாகரீக வளர்ச்சி அடைந்து இன்று தொழில்நுட்பத்தில் அரக்கனாக இருக்கிறது என்றால் என்ன காரணம்? யாரோ ஒரு மேதாவி படித்ததனால். யாரோ ஒருவன் தன் அறிவை விசாலப் படுத்த விரும்பியதால். படிப்பு உங்களை மட்டுமல்ல உங்கள் சுற்றி உள்ள இந்த சமூகத்தையும் சேர்ந்தே களை எடுக்கிறது. 

படிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரமும் இல்லை.. ஆர்வமும் இல்லையே?

புகைப் பிடிக்க வேண்டும் என்று ஒருவன் மனதில் தோன்றக் காரணம் அவனை சுற்றி உள்ள சமூகம். அது ஒரு தனி மனித விருப்பமல்ல. ஆனால் புகைக்க ஆரம்பித்தால் அதனை எளிதில் யாரும் விடுவதில்லை. கெடுதல் தரக் கூடிய ஒரு நஞ்சே மனித மனதில் ஆழப் பதியும்போது ஏன் படிக்க வேண்டும் என்கிற எண்ணம் பதியாது?

எந்த ஒரு செயலையும் தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்துப் பாருங்கள். அடுத்த நாள் அதற்கு நீங்கள் அடிமை. கடமையே என தினமும் ஒரு பதினைந்து நிமிடமாவது படியுங்கள். படிப்பதற்கும் ஒரு பயிற்சி தேவை. முதலில் உங்களுக்கு பிடித்த செய்திகள், திரைப்படம், அரசியல், பொது அறிவு என படியுங்கள். பின்னர் இலக்கியங்கள் மீது உங்களுக்கு தானாகவே ஆர்வம் ஏற்படும். 

படிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்கள் ஏற்பட்டுவிட்டால் நேரம் ஒரு பொருட்டல்ல. கழிவறையில் அமர்ந்திருக்கும் அந்த நேரத்தை படிக்க செலவிடுங்கள். உங்கள் உடலின் கழிவுகள் மட்டுமல்ல. மனதின் கழிவுகளும் சேர்ந்தே அகற்றப்படும். 

படித்துப் பாருங்கள். உங்கள் சினம் தணியும். உங்கள் மனம் பண்படும். உங்களை சுற்றியுள்ள பிரச்சனைகள் சுகமாக மாறும். எதையும் உங்கள் மனம் இலகுவாக எடுத்துக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பறவைப் போல உங்கள் மனம் அந்தரத்தில் பறக்கும். உங்கள் அகம் அழகாகும். 

கொஞ்சம் படித்துதான் பாருங்களேன். உங்கள் பாரம் குறைவதை நீங்களே உணர்வீர்கள்.  இந்த உலகம் உங்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கும். நீங்கள் படிக்க என்னால் முடிந்த ஒரு சிறு உதவியே இந்த நூல் அறிமுகம் பகுதி.